மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட; பாதாள உலகத் துப்பாக்கிதாரி கட்டுநாயக்கவில் கைது.!!!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன நேற்று (25) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். நாடு திரும்பியவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நேரத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதான சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

