ஆரையம்பதி ஒல்லிக்குளத்தில் வேன் தீப்பற்றி எரிந்து நாசம் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.!!!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் இன்று (10) மாலை பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருகை தந்த ஒரு குழுவினர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி குறித்த வேனில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியை வேன் கடக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே தீ வேன் முழுவதும் பரவி, வாகனம் முழுமையாக எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சில நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
வேனில் தீப்பற்றியதை அவதானித்த பயணிகள் உடனடியாக வாகனத்திலிருந்து வெளியேறியதால், அதில் பயணித்த அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தீப்பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
