கட்டுப்பாட்டை இழந்த வேன் கட்டிடத்தில் மோதியது: 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
புத்தளம் தில்லையாடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி, பின்னர் அருகிலிருந்த இருமாடிக் கட்டிடத்தின் தூணில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. எனினும், வேன் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்திருந்த 10 பேரும் உயிரிழப்பு எதுவும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நேற்று (24) புதன்கிழமை இடம்பெற்றது.
அநுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வேன், புத்தளம் தில்லையாடி பகுதியில் வந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சாலையில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதிய வேன், பின்னர் அருகிலிருந்த இருமாடிக் கட்டிடத்தின் தூணில் மோதிய நிலையில் நின்றது.
இந்த விபத்தில் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்திருந்த 10 பேரும் உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர். அவர்களில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

