ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் ஆரம்பமான வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி.!!!
● தேங்கியுள்ள 6 இலட்சம் இலக்கத் தகடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை.
வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில், ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்தப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி நீண்டகாலமாக ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உரிய கொள்முதல் நடைமுறைகளின் அடிப்படையில் புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு அமைய இன்று முதல் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அச்சிடப்படாமல் சுமார் 6 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் தேங்கியுள்ளதாகவும், புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிடுகையில் சுமார் ஒன்றரை இலட்சம் இலக்கத் தகடுகளை அச்சிடும் பொறுப்பு ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மீதமுள்ள இலக்கத் தகடுகளை எவ்வாறு அச்சிட்டு விநியோகிப்பது என்பது தொடர்பில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எதிர்காலத்தில் இந்தத் தேக்க நிலையை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது தினசரி கிடைக்கும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஏற்ப இலக்கத் தகடுகளை அச்சிட்டு விநியோகிக்கும் திறன் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனுடன், புதிய சேவையாக வாகனப் பதிவு முடிவடைந்து இலக்கத் தகடு அச்சிடப்பட்டு வெளியேறியதும், அதுகுறித்த தகவல் வாகன உரிமையாளரின் கைத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.


