பெருமழையால் வட்டவளை புகையிரத நிலையம் கடும் சேதம்; நிலைய அதிபர் மயிரிழையில் உயிர் தப்பினார்.!!!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மலையகப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், வட்டவளை புகையிரத நிலையம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
புகையிரத நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்று நிலச்சரிவுக்கு உள்ளானதால், சரிந்து வந்த மண் மற்றும் பாறைகள் நிலையக் கட்டடத்தின் மீது விழுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் பணியில் இருந்த நிலைய அதிபரின் கால்கள் மண்ணில் சிக்கிய போதிலும், அங்கிருந்தவர்களின் விரைவான நடவடிக்கையால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஏனைய பணியாளர்களுக்கு எவ்வித உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நிலச்சரிவினால் புகையிரத நிலையத்தின் சமிக்ஞை (Signal) அமைப்பு முற்றாக செயலிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதை முன்னிட்டு விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, கம்பளை மற்றும் கெலியோய புகையிரத நிலையங்களில் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கருதி அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் புகையிரத நிலையக் கட்டடங்கள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் நிலவுவதால், நாவலப்பிட்டியிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு வட்டவளை நோக்கி இயக்கப்படவிருந்த புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நானுஓயா – பதுளை இடையிலான புகையிரத சேவைகள் தற்போது வரை வழமைபோல் இடம்பெற்று வருவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





