காட்டு யானை தாக்குதல்: சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி.!!!
இலங்கையின் பொலன்னறுவை மாவட்டம் அரலகங்வில பகுதியில் காட்டு யானை நடத்திய தாக்குதலால் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் கீழ் சிக்கி சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் சிறுமி தாயுடன் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், காட்டு யானை வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டதால் விளக்கை ஒளிர்விப்பதற்காக தாய் எழுந்துச் சென்றபோது யானை வீட்டின் சுவரைத் தாக்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சுவர் இடிந்து சிறுமியின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்பள்ளி மாணவியான சிறுமியின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.