சீன நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை துணிகள் – பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு.!!!
-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-
2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களில் கல்வி பயிலும் மாணவ பிக்குகள் மற்றும் சீல மாதாக்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான பாடசாலைச் சீருடைத் துணிகளை சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கியிருப்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong) உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலைச் சீருடைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சீன மக்கள் குடியரசு வழங்கிய மொத்தம் 11.484 மில்லியன் மீற்றர் பாடசாலைச் சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கி முடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் இரு தரப்பினரிடையிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த நன்கொடையின் மூலம் 4.4 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைச் சீருடை வசதியைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வு இலங்கை – சீன நட்புறவின் மேலும் வலுப்பெறும் அடையாளமாகக் கருதப்படுவதுடன், நாட்டின் கல்வித் துறைக்கு சீன அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.





