உலக அமைதிக்கான நடைப்பயணம்: மூன்றாவது நாள் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
உலக அமைதியை பிரார்த்திக்கும் நோக்கில் “அமைதிக்கான நடைப்பயணம்” என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் சிறப்பு நடைப்பயணத்தின் மூன்றாவது நாள் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் 110 நாட்கள் நீடித்த அமைதி நடைப்பயணத்திற்கு தலைமை வகித்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இலங்கைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை நடைபெறும் அமைதி நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் மூன்றாவது நாள் நிகழ்வு இன்று (24) காலை கண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து நடைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைப்பயணம் கண்டியிலிருந்து தொடரப்பட்டு மாவனல்லை நோக்கி பயணிக்கிறது.
நடைப்பயணத்தின் மூன்றாவது நாள் நிகழ்வு மாவனல்ல பெலிகம்மன வித்தியாவர்த்தன பிரிவேனா போத்குல் விகாரையில் நிறைவடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அமைதியை வலியுறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடைப்பயணம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






