ஏறாவூரில் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்த: 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.!!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் – 05, நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், சிறுமி தனது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினமான நேற்று மாலை 5.30 மணியளவில் சிறுமியும் அவரது சகோதரனும் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.
வெளியில் சென்றிருந்த தந்தை பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, குளியலறையில் இருந்த சுமார் இரண்டரை அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக சிறுமியை மீட்டு ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.