வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தி மரம் எரிந்து வீழ்ந்தது.!!!
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – பாலத்தோப்பூர் சந்தியில் நீண்டகாலமாக காணப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான இத்தி மரம் நேற்று (23) இரவு திடீரென தீப்பற்றி எரிந்து வீழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பற்றி எரிந்த மரம் பின்னர் வீதியின் குறுக்கே சாய்ந்து விழுந்ததால், பாலத்தோப்பூர் பாலத்தை ஊடறுத்து செல்லும் போக்குவரத்து பல மணிநேரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீப்பற்றிய மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் இன்று (24) காலை சுமார் 7.00 மணி முதல் அந்தப் பகுதியில் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த இத்தி மரம் தீப்பற்றியதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த இந்தப் பழமையான மரம் எரிந்து வீழ்ந்தமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




