பொலிஸ் நிலையத்தில் வாக்குவாதம் வன்முறையாக மாறியது; 5 பேருக்கு தண்டனை.!!!
குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே மீண்டும் மோதலில் ஈடுபட்டு பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவித்த 5 பேருக்கு தலா ரூ.300 அபராதமும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு தொடர்பில் இரு தரப்பினரும் விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, சமரசமாகச் செல்ல இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றபோது, பொலிஸ் நிலைய வளாகத்திலேயே இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை அவதானித்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி, பொதுஇடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த 5 பேரை உடனடியாகக் கைது செய்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் பொலிஸ் நிலையத்தின் தனித்தனி சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின்போது, சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டதுடன், சமாதானமாகச் செல்ல விருப்பம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிவான், ஒவ்வொரு சந்தேகநபருக்கும் தலா ரூ.300 அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையையும் வழங்கி தீர்ப்பளித்தார்.