காத்தான்குடியில் மாவட்டத்தின் முதலாவது பிரதேச தொழிற் சந்தை: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கிடையில் முதலாவது முன்னோடித் திட்டமாக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விசேட தொழிற் சந்தை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (21) சிறப்பாக நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டின் முன்னணி அரச மற்றும் தனியார் பெருநிறுவனங்கள் பல கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களில் காணப்படும் வேலைவாய்ப்புகள், தொழில்சார் பயிற்சிகள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமளித்தன.
இந்த தொழிற் சந்தையின் மூலம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் தொழில் தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பலர் நேர்முகப் பரீட்சைகளிலும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஹன்சுல் சிஹானா, மனிதவள உத்தியோகத்தர் எம்.ரீ.எம். அஸ்மி தாஜுதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீ. மைக்கல் கொலின் உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்துகொண்டு, தற்போதைய தொழில் சந்தையின் சவால்கள், தொழில்நுட்பத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டத்தில் முதன்முறையாக இத்தகைய தொழிற் சந்தை காத்தான்குடியில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டமை பிராந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










