மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு; பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரிக்கை.!!!
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையப் பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) மாலை சுமார் 3.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாவியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள மரம் ஒன்றின் கீழ், சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த நபரை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரை தொடர்புகொண்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
