காத்தான்குடியில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய தூய்மைப் பணித் திட்டம் ஆரம்பம்.!!!
18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் தூய்மைப் பணிகள் முன்னெடுப்பு.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மைப் பணித் திட்டத்தின் கீழ், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (08) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி வடக்கு 167A கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் இத்தூய்மைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது கால்வாய் ஓரங்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன், வீதியோரங்களில் அடர்ந்து காணப்பட்ட புற்கள் வெட்டி அகற்றப்பட்டு சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் காத்தான்குடி இணைப்பாளருமான எம்.பி.எம். பிர்தெளஸ் நழீமி, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பினர், இலங்கை விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பரிசோதகர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இன்று காலை ஒரே நேரத்தில் இத்தூய்மைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















