காத்தான்குடி கடற்கரையில் தீக்கிரையான மீனவ வாடி முழுமையாக புனரமைப்பு; மீனவரிடம் கையளிப்பு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் அண்மையில் தீக்கிரையான மீனவரின் மீனவ வாடி முழுமையாக புனரமைக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (14) அதன் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மீனவ வாடி முற்றாக எரிந்து சேதமடைந்ததுடன், குறித்த மீனவரின் அன்றாட மீன்பிடித் தொழிலும் குடும்ப வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஏ.எம். பர்சாத் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக, மீனவ வாடி முழுமையாக புனரமைக்கப்பட்டு இன்று மீனவர் மன்சூரிடம் கையளிக்கப்பட்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் காத்தான்குடி நகரசபையில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களின் மாதாந்த ஊதியம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் நிதிப் பங்களிப்புடன் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட மீனவ வாடி கையளிக்கும் நிகழ்வில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சியாத், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான ஏ.எம். பர்சாத் மற்றும் மசூத் பைசூல் மஹா, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சங்க உறுப்பினர் மீனவர் அஸ்மி உள்ளிட்ட ஏத்துக்கால் மீனவர்கள், உலமாக்கள் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, புனரமைக்கப்பட்ட மீனவ வாடி ஊடாக ஓரிரு நாட்களில் தனது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மீனவர் மன்சூர் தெரிவித்தார்.






