மட்டு திக்கோடையில் யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை தும்பாலை பகுதியில் அமைந்துள்ள வயல் நிலத்தில், நேற்று (20) சனிக்கிழமை காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளின் அடிப்படையில், யானை உயிரிழந்ததாகக் கண்டறியப்பட்ட வயல் நிலத்தின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யானையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் மனித-யானை மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

