திருகோணமலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த: அவசர ஒருங்கிணைந்த நடவடிக்கை.!!!
திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து அரச துறைகளையும் உள்ளடக்கிய விசேட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட டெங்கு பணிக்குழுக் கூட்டம் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமை தாங்கினார்.
டெங்கு வைரஸ் வகைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் காணப்படும் வேறுபாடுகள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் Aedes aegypti கொசுக்களின் பெருக்கம் மாவட்டத்தில் கணிசமாக அதிகரித்துள்ளமை ஆகியவை தற்போதைய நிலைமைக்கான முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், இதற்காக அனைத்து அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இதன்படி, கொசுக்கள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அழிக்கும் தொடர்ச்சியான தூய்மைப் பணிகளை முன்னெடுத்தல், உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் கழிவுகளை முறையாக அகற்றுதல், டெங்கு தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படையினர், பொலிஸார், பொது நிர்வாக அதிகாரிகள் இணைந்து கள நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்த ஒற்றுமை, பொறுப்புணர்வு மற்றும் முன்கூட்டிய செயல்பாடுகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டதுடன், மாவட்டத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க அனைவரும் பங்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.








