மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேற்றம்: பண்ணையாளர்கள் அச்சத்தில்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக காடுகளை அழித்து குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் கடந்த ஒரு மாத காலமாக குறித்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து காடுகளை வெட்டி குடிசைகள் அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (30) மதியம் சிலர் கத்திகளுடன் பண்ணையாளர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு சென்று அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதுடன், பண்ணையாளர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்திலும் உள்ளனர்.
தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்களாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பண்ணையாளர்களுக்கு, அண்மைக்கால நிகழ்வுகள் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு நீதிமன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், சிலர் அவ்வுத்தரவுகளை மீறி தொடர்ந்தும் அப்பகுதியில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், அத்துமீறி நுழைவோர் தொடர்பில் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பண்ணையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், காடுகளை அழித்தல், புல்வெளிகளுக்கு தீவைத்தல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மகாவலி அதிகாரசபை, வன பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உடனடி கவனம் செலுத்தி சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



