குருக்கள்மடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரிக்கு காத்தான்குடியில் பிரியாவிடை.!!!
குருக்கள்மடம் 11 சின்ஹ ரெஜிமன்ட் (SINHA REGIMENT) இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய லெப்டினன்ட் கேணல் B.R.M.G.W.A.R. பாலகல்ல, கேணல் (Colonel) பதவிக்கு பதவி உயர்வு பெற்று கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
அவரை கௌரவிக்கும் நிகழ்வும், பிரியாவிடை நிகழ்வும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா (அல் அக்ஸா) பள்ளிவாயலில், பள்ளிவாயலின் தலைவர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் நேற்று (01) நடைபெற்றது.
இந்நிகழ்வில் குருக்கள்மடம் இராணுவ முகாமின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரி மேஜர் சம்பத் தென்னகோன், பள்ளிவாயலின் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குருக்கள்மடம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாகச் செயல்பட்ட லெப்டினன்ட் கேணல் பாலகல்ல, காத்தான்குடி மக்களுடனும் அப்பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய அதிகாரியாகப் காணப்பட்டார்.
அத்தோடு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதாக நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களில் மக்களுக்கு உதவியதுடன், காத்தான்குடி கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் இராணுவ வீரர்களுடன் இணைந்து நேரடியாகக் களத்தில் பணியாற்றியதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், மீள்குடியேறிய மக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தார்.
காத்தான்குடியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு நிர்மாணித்துத் தரும் திட்டத்திலும், தனவந்தர்களின் நிதி உதவியுடனும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடனும் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவில், பதவி உயர்வு பெற்ற கேணல் பாலகல்லவுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மேலும் உயரிய பதவிகளை அடைந்து நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.









