காத்தான்குடியில் வீடு திருத்தம் முதல் நீர், மின் இணைப்பு வரை; PSDG நிதியால் 11 குடும்பங்களுக்கு உதவி.!!!
மாகாண குறிப்பிட்ட அபிவிருத்தி கொடை (PSDG) வேலைத்திட்டத்தின் கீழ் சமூக நலத்துறை மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்கள் ஊடாக இயலுமை குறைந்தோர் மற்றும் வறிய குடும்பங்களுக்கான வீட்டுத் திருத்தம் மற்றும் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (06) வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி. நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
நீர் இணைப்பு, மின்சார வசதி, வீடு திருத்தம் மற்றும் மலசலகூட அமைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான முதற்கட்ட நிதியாக தலா ரூ. 50,000 வீதம் 11 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமூக சேவைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








