மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு; இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படை களமிறக்கம்.!!!
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (07) வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறைக்கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் சிறை உடைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறை உடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலை அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் நீர்கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 980 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன் தெரிவித்துள்ளார்.
