மட்டக்களப்பு காணி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை; ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (17) நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்த கோரிக்கையையடுத்து, காணி மற்றும் கால்நடை வளர்ப்பு, விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவின் ஆலோசனையின் பேரில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள், காணி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்களுடன் விரிவாக விளக்கமளித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி., காரமுனை, பொத்தானை, கிரான், கோறளைப்பற்று வடக்கு (வாகரை), கோறளைப்பற்று தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழும் மக்களுக்கு இதுவரை காணி உரிமைகள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
காரமுனைப் பகுதியில் 60 முதல் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருவதை உறுதிப்படுத்தும் பிறப்புப் பதிவுகள், ஜனாஸா அடக்கப் பதிவுகள், 1967ஆம் ஆண்டு முதல் பள்ளிவாசல் மற்றும் பாடசாலை இயங்கியதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இருந்தபோதிலும், காணி அனுமதிப்பத்திரங்கள்கூட வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களுக்கு எதிராக வனவளத் திணைக்களம் வழக்குகள் தொடர்வதாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னரும் மீண்டும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதேவேளை, சில தமிழ் பிரதிநிதிகள் குறித்த பகுதிகள் பூர்வீக தமிழ் கிராமங்கள் என்றும், அங்கு முஸ்லிம் மக்கள் குடியிருக்கவில்லை என்றும் தங்களது நிலைப்பாட்டை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி., உண்மை நிலையை உறுதிப்படுத்த கொழும்பிலிருந்து சுயாதீன உயர்மட்ட விசாரணைக் குழுவை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். உரிமையுள்ள அனைவருக்கும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உரிய காணி உரிமைகளும் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டத்தின் நிறைவில், காணி ஆணையாளர் நாயகம் சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றை நியமித்து, ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.





