வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல்; பாதுகாப்பு கோரி சுகாதார ஊழியர்கள் வீதியில் போராட்டம்.!!!
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நேற்று (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், சிகிச்சைக்காக தனது தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நபரிடம், அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடலை உடனடியாக எடுத்துச் செல்ல முயன்ற குறித்த நபருக்கு, வைத்தியசாலையின் நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கமைய மட்டுமே உடலை எடுத்துச் செல்ல முடியும் என அங்கிருந்த ஊழியர் ஒருவர் அறிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குறித்த நபர் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நேற்று நண்பகல் 1.00 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முன்பாக, திருகோணமலை–கண்டி பிரதான வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சுகாதாரத் துறையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும் பொதுமக்களின் நலனுக்காக தாங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், வைத்தியசாலை வளாகத்தினுள் நிரந்தர பொலிஸ் பாதுகாப்புச் சாவடி ஒன்றை அமைத்து, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தின் போது “ஊழியர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!”, “வைத்திய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!” எனும் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







