தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.!!!
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையினால் நிந்தவூர் விவசாயப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
பால் பிடிக்கும் பருவத்திலும், அறுவடைக்கு அண்மித்த நிலையிலும் காணப்பட்ட பல நெற்பயிர்கள் பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன், வயல்களில் தேங்கியுள்ள நீரினால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீரில் நீண்ட நேரம் மூழ்கியுள்ள நெல் மணிகள் முளைக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் எதிர்பார்த்த விளைச்சல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் அதிகரித்துள்ள நீர்வரத்து காரணமாக வயல்களில் தேங்கிய மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள், உரம் மற்றும் விதை நெல் உள்ளிட்ட விவசாயச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கடன் பெற்று செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பினால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கமநல சேவை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

