இந்தியா–ஜப்பான் உறவை வலுப்படுத்தும் உச்சி மாநாடு; பிரதமர் சனே தகாய்ச்சிக்கு மோடி சிறப்பான வரவேற்பு.!!!
இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும்.
நேற்று (01) மாலை புதுடெல்லி வந்தடைந்த அவரை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இன்று காலை ராஷ்டிரபதி பவனில், இராணுவ மரியாதையுடன் பாரம்பரிய அரசு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 16ஆவது இந்தியா–ஜப்பான் வருடாந்திர கூட்டு உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் பங்கேற்று, இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI), பொருளாதாரப் பாதுகாப்பு, முதலீடு, ஆற்றல், பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) இரு நாடுகளும் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



