பாகிஸ்தானில் பிரத்தியேக வகுப்பு நிலையக் கூரை இடிந்து விபத்து: 14 சிறுவர்கள் உயிரிழப்பு.!!!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் இயங்கி வந்த தனியார் பிரத்தியேக வகுப்பு நிலையமொன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 7 முதல் 11 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக மீட்புக் குழுவின் ஊடகப் பேச்சாளர் பரூக் அகமது தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பழமையான கட்டிடத்தின் கூரையில் ஓடுகளைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதன் போது கூரையின் மீது அதிக எடை வைக்கப்பட்டதே இடிபாட்டுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த துயரச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.


