கத்தாரை உலுக்கிய எரிவாயு தொழிற்சாலை வெடிப்பு: 54 பேர் காயம்; 18 பேரைக் காணவில்லை.!!!
கத்தாரின் முக்கிய திரவ இயற்கை எரிவாயு (LNG) பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், 18 பேரைக் காணவில்லை என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் அமைந்துள்ள ‘பர்சான்’ தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த உள்நாட்டு வெடிப்பு ஏற்பட்டதாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தொழிற்சாலையிலிருந்து நச்சு வாயுக்கள் எதுவும் கசியாததால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் கத்தார் எனர்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தலைநகர் தோகாவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராஸ் லஃப்பான், உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி. ஏற்றுமதி மையமாகக் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலால் இந்த மையம் கடுமையான சேதத்தைச் சந்தித்திருந்ததுடன், அதன் விளைவாக இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தும் ஒப்பந்த விதியை கத்தார் எனர்ஜி நிறுவனம் நடைமுறைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.





