கிழக்கின் சுற்றுலா வளர்ச்சிக்கு சர்வதேச ஒத்துழைப்பு; வெளிநாட்டு தூதுவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு முக்கிய சந்திப்பு.!!!
கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தூதுவர்கள் குழுவை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று (11) அருகம்பேயிலுள்ள Blue Wave ஹோட்டலில் சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தற்போதைய சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகள், பிராந்திய ரீதியாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் நிலவும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தூதுவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கிழக்கு மாகாணத்திற்கு ஈர்க்கும் வகையில் போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். அப்துல் வாசித், எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.



