காத்தான்குடியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின ஓவியக் கண்காட்சி.!!!
-எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ்-
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனையின் ஆபத்துகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஓவியக் கண்காட்சி ஒன்று இன்று (26) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போதைப்பொருள் பாவனையின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், சமூக சீரழிவுகள் மற்றும் குடும்பங்களின் மீது ஏற்படும் தாக்கங்கள் என்பன மாணவர்களின் படைப்பாற்றலுடன் ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இக்கண்காட்சி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை வளர்ப்பதோடு, சமூகத்திற்கு நேர்மறையான செய்தியையும் எடுத்துச் சென்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜறூப் உள்ளிட்ட பல அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
































