கிழக்கு மாகாண க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்; 129 மாணவர்கள் 9A சித்தியுடன் புதிய சாதனை.!!!
-நூருல் ஹுதா உமர்-
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.
கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.
மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

