கவிமாமணி ரீ. எல். ஜவ்பர்கான் கிழக்கு மாகாண ஊடக ஒருங்கிணைப்பாளராக நியமனம்.!!!
உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம் – அமெரிக்கா, இந்தியா சர்வதேச அமைப்பின் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஊடக ஒருங்கிணைப்பாளராக கவிமாமணி ரீ. எல். ஜவ்பர்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத்துறை மற்றும் எழுத்துத் துறையில் அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புகள் இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் இலங்கை மட்டுமன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதுடன், கவி மாமணி, தமிழ் மாமணி, அபி அருவி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் எட்டு நூல்களின் ஆசிரியராகவும், அவற்றில் இரண்டு நூல்களுக்கு தேசிய சாகித்திய அகடமி விருதுகள் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், கிழக்கு கலையக பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராகவும், “வாரவலம்” யூடியூப் சேனலின் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். மேலும் MAJA TOURS & TRAVELS சுற்றுலா ஏற்பாட்டு மையத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
பல்துறை ஆளுமை கொண்ட இவர் இலக்கியம், ஊடகம், அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஆற்றிய பங்களிப்புக்காக பல நாடுகளில் கவியரங்குகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட சர்வதேச தலைவர் கலாநிதி எஸ். எம். ரஷ்மி ரூமி அவர்கள், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த ஊடக சேவையை வழங்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


