காத்தான்குடி கலைஞர் அமீர் அலிக்கு நினைவேந்தல் நிகழ்வு.!!!
காத்தான்குடியைச் சேர்ந்த கலைஞர் சுவதம் மர்ஹூம் அமீர் அலி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (17) காத்தான்குடி முதியோர் இல்லத்தின் கே.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கலை இலக்கியக் கழகத்தின் தலைவர் செரன்டிப் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மறைந்த அமீர் அலியின் வாழ்க்கைப் பயணம், கலைத்துறைக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து பலரும் நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
நிகழ்வில், மௌலவி பௌஸ் (பலாஹி) அமீர் அலியை நினைவுகூரும் சிறப்புப் பாடலைப் பாடியதுடன், ஏனைய கலைஞர்களின் நினைவுப் பாடல்களும் இடம்பெற்றன.
“ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும்; அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்ற தலைப்பில் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம்.ஐ.எம். ஜவாஹிர் (பலாஹி) சிறப்புரையாற்றினார்.
முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர் எம்.ஐ.எம். உசனார் உரையாற்றுகையில், மர்ஹூம் அமீர் அலியின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
காத்தான்குடி கலை கலாசார சபையின் செயலாளர் எம்.ஏ.எம். சுல்மி, அமீர் அலியின் நீண்டகால கலைப்பணிகள் மற்றும் சமூகத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
நிகழ்வில் முதியோர் இல்லத்தின் தலைவரும் முன்னாள் அதிபருமான கே.எம்.ஏ. அஸீஸ், பாவலர் கவிஞர் சாந்தி முகைதீன், கலைஞர் எம்.ஐ.எம். முஸ்தபா, பாடகர் கே.எல். கமர்தீன், பிரதேச கலைஞர்கள், மர்ஹூம் அமீர் அலியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கலைஞர்களின் சார்பில் மர்ஹூம் அமீர் அலியின் புதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டதுடன், நிகழ்வின் நிறைவாக மௌலவி இக்பால் (பலாஹி) துஆ பிரார்த்தனையை நடத்தினார்.















