கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரித்தானியா – கனடா உயர்ஸ்தானிகர்கள் ஆளுநருடன் முக்கிய சந்திப்பு.!!!
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் குறித்து ஆராயும் முக்கிய சந்திப்பொன்று நேற்று (05) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களைச் சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் விரிவாக விளக்கமளித்தார். மாகாணத்தில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மாகாண நிர்வாகம் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பொருளாதார கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துதல் தொடர்பான சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்காளியாக இருந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்திப்பின் நிறைவாக நட்புறவை நினைவுகூரும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





