குருக்கள் மட மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கான பாதீட்டை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.!!!
மட்டக்களப்பு, குருக்கள் மடப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் இடத்தை அகழ்வாய்வு செய்வதற்கான ஆரம்பகட்ட பாதீட்டு (Preliminary Budget) வரைபை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்லியல் திணைக்களத்திற்கும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி வழக்கு மாநாடு (Case Conference) ஒன்றை நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாவட்ட காணிப் பதிவாளர் மற்றும் மட்டக்களப்பு SOCO (Scene of Crime Officers) பொலிஸ் பிரிவு ஆகிய தரப்புகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

