அம்பாறையில் பாரிய தீ விபத்து; தேங்காய் நார் தொழிற்சாலை தீக்கிரை.!!!
அம்பாறை மாநகர சபைப் பகுதிக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நவகம்புர தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ‘பிரபோத’ நிறுவனத்திற்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலையின் கதவொன்றை வெல்டிங் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் குவிக்கப்பட்டிருந்த தேங்காய் நார் மீது விழுந்ததன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேங்காய் நார்களும் உமிகளும் மிக விரைவாக தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டதால், சில நிமிடங்களிலேயே தீ தொழிற்சாலை முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது. இதன் விளைவாக அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தேங்காய் நார்களும் உமிகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் இலங்கை விமானப்படை முகாமின் தீயணைப்புப் பிரிவினரும், அம்பாறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கூட்டு நடவடிக்கையின் மூலம் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீ விபத்தில் ஏற்பட்ட மொத்த சொத்துச் சேதத்தின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


