121 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவுள்ள அரிய சூரிய கிரகணம்; 5 நாடுகளில் தென்படும்.!!!
121 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
1905ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி நிகழவுள்ள இந்த அரிய சூரிய கிரகணம், ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் தென்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முழு சூரிய கிரகணத்தின்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து வருவதால் சூரியன் முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் மாலை நேரத்தைப் போன்று இருண்ட நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சூரிய ஒளியில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் 2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, 2021ஆம் ஆண்டு அண்டார்டிகா, 2019ஆம் ஆண்டு சிலி ஆகிய பகுதிகளில் முழு சூரிய கிரகணங்கள் தென்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.