ஆபத்தான வீதிப்பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பொலிஸாரின் அதிரடி.!!!
• 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு சட்டநடவடிக்கை.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு வைத்து நிந்தவூர் பொலிஸார் வெள்ளிக்கிழமை (31) இரவு விசேட அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சட்டவிரோதமாக உருமாற்றம் (Modified) செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக பயணித்த இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், இதுவரை ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்தமை, தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணித்தமை, வாகன இலக்கத் தகடுகள் இன்றி இயக்கியமை மற்றும் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்றமை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது வீதிகளில் பிறரின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை இயக்குவோருக்கு எதிராக இதுபோன்ற விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயணவின் வழிகாட்டுதலிலும், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே தலைமையிலும் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



