மட்டக்களப்பில் டெங்கு காய்ச்சலால் கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு: மாவட்டத்தின் முதல் டெங்கு மரணம் பதிவு.!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த 28 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது, 2026 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான முதல் டெங்கு மரணம் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார்.
இன்று (26) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்ட அவர், மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் சி. சரவணன் உள்ளிட்ட விசேட வைத்திய நிபுணர்களும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணர்களும் கலந்துகொண்டதாக கூறினார்.
வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மறுநாள் (18) தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி அவர் சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். எனினும், பிரசவத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 12 அலகுகள் (Pints) இரத்தம் செலுத்தப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
இருப்பினும், டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில், நேற்று (25) வியாழக்கிழமை இரவு சுமார் 10.00 மணியளவில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த, ஒரு குழந்தையின் தாயாரும் பட்டதாரியுமான 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சமூகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடனே அருகிலுள்ள வைத்தியசாலையை அணுகி சிகிச்சை பெறுமாறும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.