புதிய காத்தான்குடி பிர்தெளஸ் வித்தியாலயத்தில் பிரஜாசக்தி தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ‘பிரஜாசக்தி’ தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு மட்/மம/ பிர்தெளஸ் வித்தியாலயத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய காத்தான்குடி 167A கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கும், பிரஜாசக்தி அமைப்பின் தலைவி றிபாயா சமீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கான டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.ஐ.எம். ஜூமைல் நடத்தி வைத்தார். டெங்கு பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் றபீக்கா உவைஸ், 167A சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் எம்.எம்.எம். இர்ஸாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் றமீஸா, ஆசிரியர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், பாடசாலை வளாகம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் கண்காணிக்கப்பட்டதுடன், மாணவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வும் இடம்பெற்றது.
தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இந்நிகழ்வு, சமூக மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.















