காரமுனை மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஹிஸ்புல்லாஹ் உறுதி.!!!
வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காரமுனை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் காணிப் பிரச்சினைகள் குறித்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி கவனம் செலுத்தினார்.
இந்த சந்திப்பில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு காணி தொடர்பான சிக்கல்கள் குறித்து அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். பல தடவைகள் காணி கச்சேரிகள் நடத்தப்பட்டிருந்த போதிலும் இதுவரை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலை குறித்து மக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த எம்.பி. ஹிஸ்புல்லாஹ், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் வாகரை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி விரைவான தீர்வுகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளுடன் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் பிரதேச மக்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.







