உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வேகமாக சரிவு; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களிடம் கோரிக்கை.!!!
எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தால் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீராதாரமான உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அதிகரித்த வெப்பநிலை மற்றும் நீர்வள பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, மிகவும் சிக்கனமாக நுகருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீரை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி, நீர்ச் சேமிப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜயந்தன் அனைத்து நீர்ப்பாவனையாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய வறட்சி நிலைமை மேலும் தீவிரமடைந்து, உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்தால், குடிநீர் விநியோகத்தை நிலைநிறுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் திட்டமிட்ட நீர் வெட்டு நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.