சலாமா பவுண்டேஷன் மனிதநேய உதவி; தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ரூ.7.66 இலட்சம் கையளிப்பு.!!!
மட்டக்களப்பு நகரில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து சேதமடைந்த ‘ஐ போன் ரிப்பியரிங்’ வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இர்ஷாத் அவர்களுக்கு, மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன் மற்றும் மாவட்ட வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் திரட்டப்பட்ட ரூ.7,66,000 நிதியுதவி இன்று (31) வழங்கி வைக்கப்பட்டது.
தீ விபத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வர்த்தகருக்கு மீண்டும் தொழிலை ஆரம்பிக்க உதவும் நோக்கில், சலாமா பவுண்டேஷன் மற்றும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் இணைந்து நிதி சேகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன் மூலம் 86 நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தமாக ரூ.7 இலட்சத்து 66 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது.
சேகரிக்கப்பட்ட நிதி கையளிக்கும் நிகழ்வு, இன்று (31) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் இர்ஷாத் அவர்களிடம் நிதியுதவி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகரின் தொழில் நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தாராளமாக நிதியுதவி வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் சலாமா பவுண்டேஷன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.


