திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் 24 மணிநேரத்தில் மீண்டும் உரிமையாளரிடம்; ஓட்டமாவடியில் சம்பவம்.!!!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மறுநாளே மீண்டும் அதே வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட வினோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத இருவர் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திருடிச் சென்றுள்ளனர். குறித்த திருட்டுச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு (CCTV) கமெராவில் பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாங்கள் திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை அதன் உரிய ஆவணங்கள் மற்றும் தலைக்கவசத்துடன் திங்கட்கிழமை (15) அதிகாலை மீண்டும் அதே வீட்டிற்கு கொண்டு வந்த திருடர்கள், வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் எந்தவித சேதமும் இன்றி மீளக் கிடைத்துள்ளதாகவும், திருடர்களின் இந்த எதிர்பாராத நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.