சுவிட்சர்லாந்து தூதுவர் காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுடன் சந்திப்பு.!!!
இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் டாக்டர் சிறி வால்ட் (Dr. Siri Walt), காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில், காத்தான்குடி மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, காணி தொடர்பான பிரச்சினைகள், குருக்கள் மடம் விவகாரம், மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் சம்மேளன பிரதிநிதிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.
மேலும், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தாக்கம் காத்தான்குடி மக்களிடம் இன்னும் ஆழமாக காணப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், தற்போதைய அரசாங்கம் குறித்த தாக்குதல் தொடர்பான உண்மை நிலவரத்தை முழுமையாக கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ரவூப் ஏ. மஜீத், செயலாளர் அஷ்ஷெய்க் மௌலவி ரமீஸ், முக்கியஸ்தர் சட்டத்தரணி உவைஸ், உப செயலாளர் இர்பான் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
– எம்.எஸ்.எம். நூர்தீன்



