திருகோணமலை டச்பே விவகாரம்: மூவருக்கு தலா ரூ.25,000 அபராதம்; வழக்கிலிருந்து விடுதலை.!!!
திருகோணமலை டச்பே கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு, நேற்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் இன்று நீதிமன்றில் முன்னிலையான மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தலா 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களையும், புத்தர் சிலைக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தையும் அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு எந்தவித சட்டத் தடையும் இல்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோத கட்டுமானம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பான ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய மேலும் இருவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டச்பே கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் மேற்கொண்டு புத்தர் சிலை நிறுவி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் கடுமையான நிபந்தனைகளுடன் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



