சுகாதார விதிமுறைகள் மீறல்: பொது சந்தையில் அதிரடி சோதனை; விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!!!
கல்முனை பொது சந்தை பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிய விற்பனையாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீனின் நெறிப்படுத்தலிலும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹ்ரா சாரப்தீனின் வழிகாட்டலிலும், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் இந்த விசேட சுகாதார பரிசோதனை நேற்று (05) கல்முனை பொது சந்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்களும், கல்முனை மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து பங்கேற்றனர்.
சோதனையின்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட பழுதடைந்த மரக்கறிகள், பழ வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுகாதார விதிமுறைகளை மீறிய சில விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் சுத்தமான உணவு விற்பனை தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளும் அதிகாரிகளால் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டன.





