புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதி மற்றும் கட்டளை தளபதிக்கு காத்தான்குடியில் வரவேற்பும் கௌரவிப்பும்.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் 243ஆவது இராணுவ படைப்பிரிவின் புதிய மாவட்ட இராணுவ தளபதியாக பதவியேற்றுள்ள பிரிகேடியர் கேர்ணல் (Colonel) ஆர்.ஆர்.கே. ராஜபக்ஷ உடகே மற்றும் குருக்கள்மடம் 11ஆவது இலங்கை சிங்ஹ ரெஜிமென்டின் புதிய கட்டளை தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் அருண ஹெவாகே ஆகியோருக்கு புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று (03) சிறப்பான வரவேற்பும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
இதன்போது இரு இராணுவ அதிகாரிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதுடன், அவர்களது புதிய பொறுப்புகளுக்கான வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 243ஆவது இராணுவ படைப்பிரிவின் லெப்டினன்ட் கேணல் (Lt Colonel) எச்.பி.ஐ. குமார மற்றும் குருக்கள்மடம் 11ஆவது இலங்கை சிங்ஹ ரெஜிமென்டின் இரண்டாவது கட்டளை தளபதி மேஜர் சம்பத் தென்னகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் ஹாரூன் ரசாதி, செயலாளர் அஷ்ஷெய்க் ஜவாஹிர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பதில் தலைவர் சத்தார், செயலாளர் றமீஸ் ஜமாலி, சிரேஷ்ட சட்டத்தரணி உவைஸ், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மத, சமூக, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் நாட்டின் அமைதி, சுபீட்சம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உடல் நலன் மற்றும் நலவாழ்விற்காக விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
அத்துடன், புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்ற இரு இராணுவ அதிகாரிகளுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



















