காத்தான்குடியில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய போதையொழிப்பு செயற்திட்ட நிகழ்வுகள் – மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்.!!!
(ஜே.கே)
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் இணைப்பாக்கத்தில் காத்தான்குடியில் இன்று (29) இடம் பெற்றது.
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் முற்சக்கர வாகனங்களில் அதிதிகளினால் ஓட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்” – அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.
மார்ச் மாதம் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டது. காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் எம்.எம்.எம்.சியாமிடம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.
எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினூடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

