அனுராதபுரம் சிறுமிக்கு நீதி கோரி: மட்டக்களப்பில் பெண்கள் கண்டனப் போராட்டம்.!!!
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடி நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (27) மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள், ஊர்வலமாகச் சென்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்,
“பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக”,
“மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம்”,
“பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவிற்கு எதிராக சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டதுடன், அது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில், இலங்கை அரசியலமைப்பின் கீழ் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும், பாலியல் வன்முறை போன்ற பாரதூர குற்றங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சமூக அந்தஸ்து, அரசியல் அதிகாரம் அல்லது மதத் தலைமைத்துவம் போன்ற காரணங்களுக்காக பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது என்றும், சட்ட ஆட்சியை நிலைநாட்டி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


