கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உலக வங்கியின் ஆதரவு: 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்.!!!
-எஸ்.சினீஸ்கான்-
கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவினருக்கிடையில் இன்று (24) ஆளுநர் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, RE-VIVE (துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சாத்தியமான பொருளாதாரங்கள் மூலம் பிராந்திய அதிகாரமளித்தல்) திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, கொட்பே வளைகுடா மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டம், பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் மற்றும் அருகம்பே சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் ஆகிய மூன்று முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கருத்தியல் முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், இத்திட்டங்களின் எதிர்கால முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்பந்த நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், இந்த பாரிய அபிவிருத்தித் திட்டம் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


